கால்நடைகள் தொடர்பில் கூடுதல் கவனம் தேவை!
(ஆதவன்)
வடக்கு மாகாணத்தில் இதுவரை வெப்பத்தால் கால்நடை இறப்புகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் பண்ணையாளர்கள் தமது கால்நடைகள் தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிமனையின் மாகாணப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி சிவகுருநாதன் வசீகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இந்த வெப்பகாலத்தில் என்று மட்டுமல்லாது பொதுவாகவே சில அறிவுறுத்தல்களை நாம் வழங்குகின்றோம். கால்நடைகளை திறந்தால் வெளிமேய்ச்சலுக்காக காலை 9 மணிக்கு முன்னராகவும் மாலையில் 4 மணிக்கு பின்னரே வெளியே கொண்டு செல்ல வேண்டும். மாடுகளுக்கு மேய்ச்சல் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் சுத்தமான வாளியில் தண்ணீர் வைக்கவேண்டும். நேரடி வெயிலுக்குள் மாடுகளை விடக்கூடாது. குறிப்பாக பால்மாடுகள் தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும். ஆனால் பெரும்பாலானோர் காலை 9 மணிக்கு மேய்ச்சலுக்காக கால்நடைகளை கொண்டு சென்று மாலை 4 மணிக்கே மீள பண்ணைக்கு கொண்டு வருகின்றார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.
இதன் காரணமாக மாடுகளுக்கு அதீதமான பாதிப்புகள் மற்றும் உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.கோழி வளர்ப்பாளர்கள் அதிகளவான நீரை கோழிகளுக்கு வழங்க வேண்டும். கோழிக்கூடுகள் மேலே ஓலைகளைப் போட வேண்டும். வெப்பத்தைத் தணிப்பதற்கு முடியுமான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.