(பட்சி)
இண்டைக்கு ஒருத்தரையும் குறை குற்றம் சொல்லாமல் பழங்கதையொண்டைப் பட்சி சொல்லப்போகுது.
இந்தியன் ஆமி யாழ்ப்பாணத்தைவிட்டுப் போன கையோட, யாழ்ப்பாணம் முற்ற வெளியில ஒரு கச்சேரி நடந்தது. இந்தியன் ஆமி இருக்கேக்க இயக்கம் காட்டுக்க இருந்தது. எண்டாலும் இயக்கத்தின்ர போராட்டக் கருத்துகளை வைச்சு, இந்தியாவில உள்ள பாட்டுக்காரர்களை வைச்சு நிறைய இயக்கப்பாட்டுகள் வந்தது. அப்பிடியான இயக்கப் பாட்டுகள் தான் இந்தியன் ஆமிக் கட்டுப்பாடுக்குள் எங்கட சனத்திட்ட விடுதலை உணர்வை தளர விடாமல் வைச்சிருந்தது. கூடுதலா காசி ஆனந்தன் எழுதின பாட்டுகளை தேனிசை செல்லப்பா தான் பாடினவர். காசியர் எழுதி, தேனிசையர் படிச்ச பாட்டுகளை இப்ப கேட்டாலும் புல்லரிக்கும்.
அப்பிடி காலத்தால அழியாத கானங்களைப் படிச்ச தேனிசை செல்லப்பாவை இந்தியன் ஆமி போனவுடன் இயக்கம் கச்சேரி வைக்க கூட்டியந்தது. தொண்ணூறாம் ஆண்டு ஏப்ரல் மாசம் 23 ஆம் திகதி அவரின்ர கச்சேரி முற்ற வெளியில நடக்கப் போகுதெண்டு நாலைஞ்சு நாளைக்கு முதல் தான் அறிவிப்பு வந்தது. ஆனால் கச்சேரி இலவசமில்லை. எல்லாருக்கும் ரிக்கெற்-ஒராளுக்கு ரிக்கெற் என்ன விலையெண்டு நினைக்கிறியள்? வெறும் ஒரு ரூபா தான். இந்த ரிக்கெற் காசு ஒரு அடையாளப் பெறுமதி தான். ஓசியா வைச்சு தேனிசை செல்லப்பாவையும் சனத்தையும் கேவலப்படுத்தாமல், ரிக்கெற்றுக்கு வைச்சமாதிரியும் இருக்கோணும். சனத்துக்கு குடுக்கக்கூடிய காசாவும் இருக்கோணும் எண்டு தான் இப்பிடி ஒரு ரிக்கெற் விலை. குறுகின கால அறிவிப்பு எண்டாலும் சனங்கள் வெளிமாவட்டத்தில இருந்தெல்லாம் மினிபஸ், மாட்டு வண்டில், லாண்ட் மாஸ்ரர், லொறி எண்டு வாகனங்களில முதல் நாளே வரத் தொடங்கிட்டினம்.
மேடைக்கு ஒரு அஞ்சு மீற்றருக்கு முன்னால இருந்து பெரும் நீளத்துக்கு சின்னச் சின்ன சதுரமா கயிறுகட்டி, ஒவ்வொரு சதுரத்துக்கும் இடையில ஆக்கள் போய்வர பாதை விட்டு சிம்பிளாத்தான் ஏற்பாடுகள் செய்தவை. கச்சேரி இரவிரவா நடந்தது. சனமோ மூண்டு, நாலு லட்சம். அப்பிடியொரு சனத்தை இதுவரைக்கும் முற்றவெளி கண்டேயிருக்காது. எல்லாச் சனமும் தங்களுக்கெண்டு ஒரு இடத்தைப் பிடிச்சு, அதில அமைதியா இருந்து விடிய விடிய கச்சேரியைப் பார்த்திட்டுத்தான் போனவை. சிலருக்கு கதிரை, சிலருக்கு சோபா செற்றி, மிச்ச ஆக்கள் அரைமைலுக்கு அங்கால நிண்டுதான் பாக்க வேணும் எண்ட பிரிப்பெல்லாம் கிடையாது. ஒரு சின்னப் பிரச்சினை கூட வரேலை. இத்தனைக்கும் முற்ற வெளியோட ஒட்டிக்கொண்டிருந்த கோட்டையில அப்ப ஆமிக்காரர் இருந்தவை. அவை சில சொறிச்சேட்டையள் விட்டு நிகழ்ச்சியைக் குழப்ப வெளிக்கிட்டும். சனம் ஆடாமல் அசையாமல் கச்சேரியை ரசிக்கிறதைக் கைவிடேலை.
ரிக்கெற்றில சேர்ந்த லட்சக்கணக்கான காசையும், புலிச்சின்னம் போட்ட சட்ட தங்கப்பதக்கத்தையும் மேடையில இயக்கம் தேனிசை செல்லப்பாவுக்கு குடுத்தவை. ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம் கண்டியளோ! (ஏ)
(12.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.