(பட்சி)
லைற் போஸ்ட் ஒண்டுக்கு கீழ ஒராள் கனநேரமா எதையோ தேடிக்கொண்டு நிண்டிருக்கிறார். பாவம். தனியத்தேடுறார், உதவி செய்வம் எண்டு இன்னொரு ஆள் அவருக்குக் கிட்டப் போயிருக்கிறார்.
"அண்ணை இவ்வளவு நேரமா என்னத்தைத் தேடுறீங்கள்?" எண்டு கேட்டிருக்கிறார். அதுக்கு அந்தாள் "மோதிரத்தை விழுத்திப்போட்டன். அதைத்தான் தேடுறன்" எண்டிட்டு தொடர்ந்து தேடினபடி இருந்திருக்கிறார். உதவி செய்யப்போனவரும் சேர்ந்து தேடினால், மோதிரம் அம்பிடவேயில்லை.
"அண்ணை, இதில தான் மோதிரத்தை விழுத்தினீங்களோ?"எண்டு மற்றவர் கேக்க, ''சீச்சி, நான் இதில விழுத்தேலை" எண்டிருக்கிறார். "அப்ப ஏன் இதில தேடுறீங்கள்?" எண்டு இவர் கோபமாக் கேட்டிருக்கிறார். அதுக்கு அவர் சொன்னாராம், "அங்க ஒரே இருட்டா இருக்கு. இருட்டுக்குள்ள எப்பிடித் தேடுறது. அதுதான் இந்த லைற் வெளிச்சமுள்ள இடத்தில தேடுறன்"
இப்பிடி ஆத்தில துலைச்சுப் போட்டு கடலில தேடுறது எங்களுக்கு வாடிக்கையாப் போட்டுது. ஆனால் எல்லா விசயத்தையும் அதே இடத்தில தேடினாலும் கிடைக்காது. சிலதை வேற இடங்களிலையும் தேட வேண்டியிருக்கு. எங்கட கடலுக்குள்ள இந்திய மீனவர்கள் வந்து, வலையை அறுக்கிறதும், கடலின்ர அடிமட்டும் துழாவி மீன் குஞ்சுகளைக் கூட விடாமல் வாரியெடுத்துக் கொண்டு போறதும் பெரிய பிரச்சினையாக் கிடக்குது. அதை நிப்பாட்டுறதுக்கு எங்கட மீனவர்கள் எவ்வளவோ போராடியும் ஒண்டும் உருப்படியா நடக்குதில்லை.
இந்த நிலைமையில தான் கிட்டடியில கறுப்புக்கொடிப் போராட்டம் ஒண்டுக்கு அழைப்பு விட்டவை. உண்மையில இந்தக் கறுப்புக்கொடிப் போராட்டத்துக்கு மீனவர்கள் கனபேருக்கு உடன்பாடில்லை. ஏனெண்டால், கடலில நிண்டு நாங்கள் கறுப்புக் கொடி காட்டுறதால் என்ன நடக்கப் போகுது? எண்டது அவையின்ர நிலைப்பாடு. ஆனாலும் ஒரு அமைச்சர் தான், தன்ர செலவில் 200 லீற்றர் மண்ணெண்ணெயும் குடுத்து, தன்ர கட்சி சார்பான மீனவர்களைக் கூப்பிட்டு கடலில போய்க் கறுப்புக்கொடி காட்டச் சொன்னவராம்.
ஒரு அமைச்சர் ஏன் இப்பிடி மீனவரைத் தூண்டி விடோணும் ? காரணம் இருக்கு. ஏனெண்டால் இந்த மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய ஆளே அமைச்சர் தான். இந்தியாவில இருந்து வாற மீனவரை வரவிடாமல் பாருங்கோ எண்டு அமைச்சர் ஓர்டர் போட்டால், நேவிக்காரர் செய்யத்தான் வேணும். அப்பிடி நேவிக்காரர் கண்ணும் கருத்துமா காவல் இருந்தால் இந்திய மீனவர் கச்சதீவைத் தாண்டி வரவே ஏலாது. ஆனால் அவை வடமாரட்சி கிழக்கு மட்டும் ரூர் வாற மாதிரி ஈஸியா வந்திட்டுப் போயினம் எண்டால் அதுக்குக் காரணம், நேவி அவையைப் பெரிசாத் தடுக்கிறேலை. அமைச்சரும் தடுக்கச் சொல்லி ஓர்டர் போடுறேலை. ஏனெண்டால் அமைச்சர் அயல்நாட்டைப் பகைக்க ஏலாது.
சில விசயங்களில அவருக்கு அயல்நாடு தேவை. அதாலதான் மீனவரின்ர கோபம் தன்ர பக்கம் திரும்பாமல் இருக்க இப்பிடி திசைதிருப்ப கடலில போராடுங்கோ எண்டு அமைச்சர் ஒண்டுக்கும் உதவாத போராட்டங்களுக்குத் தூண்டுறார். உண்மையில மீனவர்கள் அமைச்சருக்கு எதிராத்தான் போராடோணும். அப்பதான் அவர் ஏதும் தீர்வைத் தர யோசிப்பார். அதை விட்டிட்டு இருட்டுக்க துலைச்சுப்போட்டு லைற் உள்ள இடத்தில தேடுற மாதிரி கடலில போய் போராடினால் அது ஆருக்குத் தெரியப்போகுது.....?
(09.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.