(பட்சி)
பள்ளிக்கூடங்களில தனியப் பாடங்களை மட்டும் படிப்பிக்கிறேலை. எங்கட வாழ்க்கையில பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், நடைமுறையள் எண்டு கனக்க விசயங்களையும் சொல்லிக்குடுக்கிறவை. இளமையில் கல்வி சிலையில் எழுத்தெல்லோ. சின்ன வயதில அவைக்கு உதுகளைச் சொல்லிக்குடுத்தால் தான். பிற்காலத்தில அவை வளர்ந்தபிறகும் உதுகளை மறக்காமல் பின்பற்றுவினம். எப்பிடி நல்லவிசயங்கள் எங்கட சின்ன வயதில மனதுக்குள்ள பதியுதோ அதைமாதிரி கெட்ட விசயங்களும் சின்னனில மனதுக்குள்ள ஆணியடிச்ச மாதிரிப்பதியும். அதால என்ன விசயத்தைப் பிள்ளையளுக்கு சொல்லிக்குடுக்கோணும், என்ன விசயத்தைத் தவிர்க்கோணும் எண்டதில ரீச்சர்மார் கண்டிப்பா இருக்கவேணும். பள்ளிக்கூடங்களில விழாக்கள். போட்டியள் வைக்கிறது இப்பிடியான விசயங்களைப் பிள்ளையளுக்குப் பதியவைக்கத்தான். ஆனால் அதின்ரதாற்பரியம் தெரியாமல் கோமாளித்தனமான வேலையெல்லாம் பள்ளிக்கூடங்களில செய்யிறவையும் இருக்கினம்.
ஒரு பள்ளிக்கூடத்து ரீச்சர் கர்ப்பிணியாகி, கிட்டடியில அவாவுக்கு குழந்தையும் பிறக்கப் போகுது. இந்த நிலையில பள்ளிக்கூட அதிபரின்ர ஏற்பாட்டில, ரீச்சர்மாரெல்லாம் சேர்ந்து அந்த கர்ப்பிணி ரீச்சருக்கு பள்ளிக்கூடத்தில வைச்சு பெருமெடுப்பில 'வளைகாப்பு' நடத்தியிருக்கினம். தங்களோட படிப்பிக்கிற இன்னொரு ரீச்சருக்கு இப்பிடியெல்லாம் வளைகாப்பு வைக்கிற அளவுக்கு அவைக்குள்ள அன்பு இருக்குமெண்டால், அதை வெளியில எங்கையும் வைச்சிருந்தால் ஆரும் எதுவும் கேக்கமாட்டினம். அது அவையவையின்ற விருப்பம். ஆனால் பள்ளிக்கூட நேரத்தில. பிள்ளையளுக்குப் படிப்பிக்கிறதை விட்டிட்டு இப்பிடி வளைகாப்பு, சாமத்திய வீடு எண்டு பள்ளிக்கூட வளாகத்துக்கையே செய்ய வெளிக்கிடுறது கோமாளிக்கூத்துத்தானே. ஒருவேளை அந்த ரீச்சர் தன்ர வளைகாப்புக்கு பள்ளிக்கூடப் பிள்ளையள் வர வேணுமெண்டு ஆசைப்பட்டதால, அதை பள்ளிக் கூடத்தில வைச்சாவோ தெரியாது. கர்ப்பிணியள் ஆசைப்படுற எல்லாத்தையும் செய்து குடுக்கோணும் எண்ட ஒரு பாரம்பரியம் எங்களிட்ட இருக்கு அதுக்கும் கூட அவான்ர வீட்டில பங்ஷனை வைச்சிட்டு பிள்ளையளை அங்க கூப்பிட்டிருக்கலாம். பள்ளிக்கூடம் எண்டது கோயில் மாதிரி. அதைக் கலியாண மண்டபம் மாதிரி உப்பிடி விழாக்கள் நடத்திற இடமாத்தக்கூடாது.
இதெல்லாம் மலையகத்தில நடந்த சம்பவம் தானே எண்டு நாங்கள் அலட்சியமாவும் இருக்கேலாது. ஏனெண்டால் எங்கட ஆக்களும் புதிசா என்னென்ன பங்ஷனை, வித்தியாசமாக் கொண்டாடலாம் எண்டு வெறியில நிக்கினம். அவையள் ஆருக்கும் இப்பிடி பள்ளிக்கூடத்தில வளைகாப்பு நடத்தின கதை தெரிஞ்சால், தங்களுக்கும் பள்ளிக்கூடத்தில வளைகாப்பு நடத்தோணும் எண்டு நிண்டாலும் நிப்பினம் கண்டியளோ.
(12.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.