காடெல்லாம் களனியான காலம் போய். களனியெல்லாம் கட்டடக்காடா மாறுற காலம் இப்ப. எங்க பார்த்தாலும் ஒரே கட்டடவேலைதான். இப்பிடியே போய்க்கொண்டிருந்தால் கொஞ்சக்காலத்தில வடக்கில தோட்டம் செய்ய காணியைக் கண்டு பிடிக்கிறதே பெரும்பாடா மாறிரும். கட்டடம் கட்ட அனுமதி குடுக்கிறவையும் உள்ளால ஏதும் வாங்கிக் கொண்டு கண்ணைமூடிக் கொண்டு இருக்கிறதால, நல்ல தறை எல்லாம் நாலுமாடிக்கட்டடமா மாறுது. சரி, அப்ப கட்டடம் ஒண்டும் கட்டாமல் இப்பிடியே இருக்கவேணுமோ? எண்டு எதிர்க்கேள்வியும் ஆரும் கேப்பினம். நல்ல கேள்விதான். ஆனால் தோட்டம். வயல் எண்டு எங்கட பசியைப் போக்கிறதுக்கெண்டு இருக்கிற வளமான காணியளை விட்டிட்டு, புல் பூண்டு வரப் பஞ்சிப்படுற தரிசு நிலங்களில கட்டடங்களைக் கட்ட அனுமதி குடுத்தால், அந்த வாழாவெட்டித் தரிசுகளுக்கும் வாழ்வு கிடைக்கும், தோட்டக் காணியளும் தப்பிப்பிழைக்கும்.
கிட்டடியில வடக்கில முதன்முறையா ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு (பிளட்ஸ் ) ஒண்டு கட்டுப்படுறதா தகவல் அறிஞ்சிருப்பியள். ஆனால் உண்மையில வடக்கில முதலாவது அடுக்குமாடிக் குடியிருப்பு எண்டால், குருநகரில உள்ள அஞ்சு மாடிக்குடியிருப்புத் தான். கொழும்பில 'பிளட்ஸ்' வாழ்க்கைதான் சகஜம். ஆனால் இஞ்ச அப்பிடியில்லை. குருநகரைத் தவிர வேற எங்கையும் 'பிளட்ஸ்' வடக்கில இல்லை. வருங்காலத்தில இஞ்சயும் காணித்தட்டுப்பாடு வந்திடும் எண்டு நினைச்சோ என்னவோ, தரிசுக் காணி ஒண்டில இந்த 'பிளட்ஸை' தனியார் கட்ட வெளிக்கிட்டவை. பரவாயில்லையே, தோட்டக் காணியளை விட்டிட்டு இப்பிடி தரிசுக்காணியை 'பிளட்ஸ்' ஆக்கி நல்லவேலை செய்யினம் எண்டு பார்த்தால், அதுக்கையும் கனக்க விளையாட்டுகள் நடக்குதாம்.
அந்த 'பிளட்ஸ்' கட்டுப்படுற காணிக்குள்ள வகை தொகையா பனை மரங்கள் நிண்டது. அதுகளைக் காணியைத் துப்புரவு செய்யேக்க அந்தப் பனை மரங்களை எல்லாம் வெட்டி, காணிக்குள்ள புதைச்சு, அதை நிரப்பி, அதுக்கு மேலதான் கட்டடம் கட்டுப்படுகுதாம். அப்பிடி மரத்தைப் புதைச்சு நிலத்தை உயர்த்தினால், பிறகு அங்க மரம் உக்கத் தொடங்க பள்ளம் வந்தால், அந்தக் குடியிருப்புக்கும் ஆபத்து. அதைவிட இப்பிடி வகைதொகையா பனைமரங்களை வெட்டி விழுத்த ஆர் அனுமதி குடுத்தது எண்டு இதுவரைக்கும் தெரியேலை.
அதைவிட 'பிளட்ஸ்' கட்டுற இடத்துக்கு கிட்ட இருந்த நீரேந்துப் பகுதிகளில் கிடந்த மணலை ஓர் அனுமதியும் இல்லாமல் அள்ளிக்கொண்டு போய், இந்தத் திட்டத்துக்குப் பொறுப்பானவரின்ற இன்னொருகாணிக்குள்ள பதுக்கி வைச்சிருக்கினம். அந்தக் காணியும் இதுக்குப் பக்கத்திலதான் இருக்குது. எங்கயிருந்து மணலை அள்ளிச்சினமோ அந்த இடங்களை நிரப்பித்தாறம் எண்டு உந்த 'பிளட்ஸை'க்கட்டுற கொம் பனிக்காரர் சொன்னவையாம். ஆனால் இன்னமும் அப்பிடி ஒண்டையும் அவை நிரப்பேலை எண்டு சனங்கள் குறைப்படுகினம், அதைமாதிரி, இந்த 'பிளட்ஸை'க் கட்ட விட்டால், அல்லைப்பிட்டி றோட்டில 200 மீற்றர் தூரம் காப்பெற் போட்டுத்தாறமெண்டும் உதே கொம்பனியால சொல்லுப்பட்டிருக்கு. அதையும் அவை செய்யக் காணேலை. ஒரு நல்ல திட்டத்தைச் செய்யேக்க அதைக் குறையில்லாமல் செய்தால், இன்னும் எல்லாரும் வரவேற்பின மெல்லோ.
(14.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.