ஆத்தில போட்டாலும் அளந்து போடவேணும். பிச்சை போடேக்கையும் அது சரியான ஆளுக்குத்தான் போடுறமோ எண்டு தெரிஞ்சு போடவேணும். இல்லாட்டி சிலரின்ர சொகுசு வாழ்க்கைக்காக நாங்கள் காசு குடுத்துக்கெடுத்துக் குட்டிச்சுவராக்கிறதாப்போடும். யாழ்ப்பாணம் ரவுணுக்கு கிட்டவுள்ள கோயில் ஒண்டில கனகாலமாப் பிச்சையெடுக்கிற ஒருத்தர் இருக்கிறார். ஒவ்வொருநாளும் மத்தியான நேரத்தில ஒராள் அவரிட்ட வருவார். வாறவரிட்ட இந்தப் பிச்சையெடுக்கிற ஆள் தன்னட்ட இருக்கிற காசை குடுப்பார். அவரும் காசை எண்ணி வாங்கிக் கொண்டு வெளிக்கிடுவார். கொஞ்சநேரத்தில காசை வாங்கிக்கொண்டு போனவர் கையில் ஒரு கடுதாசிப்பையோட அங்க வருவார். ஆக்கள் நிக்கின மோ எண்டு நோட்டம் விட்டிட்டு, பிச்சையெடுக்கிறவரிட்ட அந்தக் கடுதாசிப் பையைக் குடுத்திட்டு பறந்திடுவார். பிறகு கடுதாசிப் பையைத் திறந்து அதுக்க இருக்கிற போத்தில வாய்க்கை வைக்கிறதும், பிச்சை எடுக்கிறதுமா அவர் இருப்பார். செம்மனச் செல்வியிட்டை புட்டுவாங்கிச் சாப்பிட்டுப் போட்டு சிவபெருமான் ஆடிப்பாடிப் போட்டு, அணையைக் கட்டாமல் நித்திரை கொண்ட மாதிரி, போத்திலில இருக்கிறதைக்குடிச்சு முடிச்சிட்டு, பிச்சையெடுக்கிறவர் அப்பிடியே சரிஞ்சு படுத்திடுவார்.
பிறகு அடுத்த நாள்தான் பிச்சையெடுக்கத் தொடங்குவார். இப்பிடியே போகுது அவரின்ர பொழுது.
அவருக்குக் குடிக்காட்டி கை, காலெல்லாம் நடுங்கும். பாவம், மனிசன். அதுக்காகத்தான் ஒவ்வொரு நாளும் நான் வாங்கிக் குடுக்கிறனான் எண்டு அவருக்கு 'பொருள்'வாங்கிக் குடுக்கிறவர் சொல்லுறார். இப்பிடி 'பொருளை' வாங்கிக் குடுக்கிறவருக்கும் புறிம்பாக் கொஞ்சக்காசு குடுபடுகுது. இல்லாட்டி ஒவ்வொரு நாளும் இந்த வெயிலுக்க போய், 'பொருள்' வாங்கியந்து குடுப்பாரோ? அவருக்கும் ஏதோ பொசிப்பிருக்குது. அதாலதான் உந்த இறக்குமதியாவாரத்தில இறங்கியிருக்கிறார்.
இப்பிடி அவையள் குடிச்சு வெறிக்கிறதுக்குத்தான் நாங்கள் காசைப் போட்டுக்கொண்டு இருக்கிறம். இந்தாள் மட்டுமில்லை யாழ்ப்பாணம் பஸ்ராண்டில பிச்சை எடுக்கிற சிலரும் குடிக்கிறதுக்காகவே பிச்சையெடுக்கினம்.அதில ரண்டு, மூண்டு பேர் பொம்பிளையன். பஸ்ஸுக்க அவையள் ஏறிப் பிச்சை கேக்க வரேக்கையே நல்ல 'கணகணப்பாத்தான்' வருவினம், 'பக்' கெண்டு சாராயமணம் மூக்கில அடிக்கும். அதால கையில காசு எடுக்கிறதுக்குப் பதிலாக எல்லாரும் மணத்தில இருந்து தப்ப மூக்கைத் தான் பொத்த வேண்டியிருக்கும். இப்பிடிப்பட்டவையால உண்மையா வாழுறதுக்கு வேற வழியொண்டுமில்லாமல் பிச்சையெடுக்கிறவையையும் பிழையாவெல்லோ நினைக்கவேண்டியிருக்கு.
கடைசியா ஒரு கொசுறுத்தகவல் யாழ்ப்பாணத்தில உள்ள பேமஸான கோயில் ஒண்டில முந்தி ஒருத்தர் பிச்சை எடுத்தவர். அவர் ஒவ்வொருநாளும் தான் பிச்சையெடுத்த காசை பக்கத்தில் உள்ள கடை
முதலாளியிட்டக் குடுத்து வைப்பார். இப்பிடி 20 லட்சத்துக்கும் மேல சேர்த்திட்டார்.ஆனால் அதை அனுபவிக்காமலே அந்தப் பிச்சையெடுக்கிறவர் செத்திட்டார். பிறகு கடை முதலாளிதான் அவருக்குச் செத்தவீடெல்லாம் வடிவாச் செய்தவர். இப்பிடியும் சில பிச்சைக்காரர் இருந்திருக்கினம் கண்டியளோ.
(29.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.