(பட்சி)
அறப்படிச்ச பல்லியே கூழ்ப்பானைக்குள்ள விழுந்த கதைமாதிரி, கல்வியமைச்சரே தேசியக் கொடியைத் தலைகீழா யாழ்ப்பாணத்தில ஏத்தியிருக்கிறார். நல்லகாலம். உடனேயே கண்டு பிடிச்சதால அந்த இடத்திலேயே தேசியக்கொடியை கீழ இறக்கி பிறகு சரியா ஏத்தினவை. இத்தினைக் கும் தேசியக்கொடியை தலைகீழா ஏத்துறதெண்டது இலங்கைச் சட்டத்தில கிரிமினல் குற்றம். நல்ல வேளை அமைச்சர் எண்டதால தப்பிச்சார். இல்லாட்டி உதை வேற ஆரும் ஏத்தியிருந்தால் இப்ப ஜெயிலுக்க தான் இருந்திருப்பினம். இப்பிடி தலைகீழாத் தேசியக் கொடியை ஏத்துறது கிரிமினல் குற்றமெண்டால், அதை ஒருக்கா முதலே செக் பண்ணிப் பார்த்திருக்கலாமெல்லோ. பொதுவா இப்பிடி அமைச்சர்மார். அரசதலைவர் தேசியக்கொடியை ஏத்தப்போறார் எண்டால், அதுக்கு முதலே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிகாரிமார் தேசியக்கொடி சரியாக் கட்டுப்பட்டிருக்கோ. பிரச்சினை இல்லாமல் ஏறுமோ, கயிறு நல்லா இருக்கோ எண்டெல்லாம் ஒண்டுக்கு ரண்டு தரம் பார்க்காமல் இருக்கமாட்டினம். அப்ப இப்ப மட்டும் ஏன் சிக்கல் வந்தது. அங்கதான் இருக்கு விசயம்.
இது ஒரு பள்ளிக்கூடத்து நிகழ்வு எண்டாலும் ஏற்பாடு செய்தது மாகாணக் கல்வி பணிமனை தான். ஆனால் பணிமனைக்குள்ள வடமாகாணப் பணிப்பாளருக்கும் அவருக்கு அடுத்த கட்டத்தில உள்ள அதிகாரிமாருக்கும் இடையில கடுமையான பனிப்போர் நடக்குது. பணிப்பாளர் அடுத்த வருசம் பெஞ்சன் எடுக்கப் போறார். எண்டாலும் அவருக் குள்ள ஒரு தாழ்வுமனப்பான்மை இருக்கு. என்னெண்டால் அவரைவிட அவருக்கு கீழ உள்ளவை கல்வித்தகுதி கூடின ஆக்கள். இந்த ஈகோவால அவர் தனக்கு கீழ இருக்கிறவை தன்ர சொல்லுக் கேக்காயினம் எண்டு தானே நினைச்சுக் கொண்டு, மூண்டாம் கட்ட அதிகாரியளைக் கொண்டுதான் தன்ர வேலையளைச் செய்விக்கிறவராம். அதோட கன வருசமா வெளிமாவட்டங்களில வேலை செய்து போட்டு, யாழ்ப்பாணத்துக்கு வந்த அதிகாரிமாரையெல்லாம், மாவட்ட இடமாற்றம்' எண்ட பேரில திரும்பவும் வெளிமாவட்டங்களுக்கு பணிப்பாளர் தூக்கி யடிச்சிருக்கிறார்.ஆனால் உண்மையில இப்பிடி மாவட்டங்களுக்கிடையிலான இடமாற்றம் ரண்டாம்கட்ட அதிகாரியளுக்கு இல்லவே இல்லையாம். சேவை நிலைய இடமாற்றம் தான் இருக்காம். இப்பிடி இல்லாத பொல்லாத இடமாற்றமெல்லாம் குடுத்தால, அவையள் மேன்முறையீடு செய்தும் அதையும் பணிப்பாளர் கண்டுகொள்ளேலையாம். இப்பிடி ரண்டாம் கட்ட அதிகாரியளைப் பழிவாங்கிறதால இந்தமுறை கல்வியமைச்சர் வந்த நிகழ்வு ஏற்பாட்டுக்கு போகாமல் அந்த அதிகாரிமார் புறக்கணிச்சிருக்கினம். பணிப்பாளரும் அவை வாறதை விரும்பேலை.சிலவேளை தன்னைப் பற்றி அமைச்சருக்கு ஏதும் போட்டுக் குடுத்திடுவினமோ எண்ட பயம்தான் காரணமாம்.
இப்பிடி தனக்குக் கீழ உள்ள ரண்டாம் கட்ட அதிகாரிமாரை பகைச்சதுக்கு பலன் தான், உந்தத் தேசியக்கொடி தலைகீழான விசயம் நடந்திருக்கு. நிகழ்ச்சி நடக்கேக்க அமைச்சர் பணிப்பாளருக்கு கடும் டோஸாம். "ஒரு கொடியைக் கூட ஒழுங்காக் கட்டத் தெரியாம என்ன நிர்வாகம் செய்யிநீர்?" எண்டு அமைச்சர் பேசினது, அக்கம் பக்கத்தில உள்ளவைக்கு கூட கேட்டதாம். அமைச்சர் கேட்டதிலையும் பிழை இல்லைத்தானோ?
(07.02.2024 உதயன் பத்திரிகை)
#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.