(பட்சி)
முந்தியொரு காலத்தில எங்கட ஆக்கள் 'பண்டமாற்று' முறையிலதான் சீவிச்சவை. அந்தப் பண்டமாற்று முறையில. இப்ப இடமாற்றங்களும் நடக்கத் தொடங்கியிருக்குதாம்.
கொஞ்சக்காலத்துக்கு யாழ்ப்பாணத்தில இருந்து ஆசிரியர் களாகத் தெரிவானவைக்கு வெளிமாவட்டங்களுக்குத்தான் அப்பொயிண்ட்மெண்ட் பண்ணினவை. அந்த முதல் நியமனக் கடிதத்தில ஆறு இல்லாட்டி ஏழு வருசம் கட்டாயம் வெளி மாவட்டத்தில வேலை செய்யோணும் எண்டும் போட்டுத்தான் அனுப்பினவை. எப்பிடியோ சுத்திச் சுழண்டு வெளிமாவட்டத்தில பிற்காலத்தில வேலை செய்யிறதைவிட, முதலே செய்திட்டால் பிறகு நிம்மதியா சொந்த மாவட்டத்திலேயே வேலை செய்யலாம் எண்டதால எல்லாரும் கடும் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கின மாவட்டங்களுக்குப் போய் வேலை செய்தவை. குறிப்பிட்ட வருசம் முடிய அவை சொந்த மாவட்டத்துக்கு வந்திட்டினம். அப்பிடியிருந்தும் வெளிமாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்ததால, யாழ்ப்பாண மாவட் டத்தில இருந்து ரண்டு வருச நிபந்தனை இடமாற்றத்தில திரும் பவும் ஆசிரியர்களை அனுப்பினவை. அவையும். ஒருமாதிரி பல்லைக் கடிச்சுக்கொண்டு 'சோதினை மேல் சோதினைபோதுமடா சாமியெண்டு' பாட்டுப்படிக்காத குறையா, தங்களுக்கு ஒதுக்கின மாவட்டங்களுக்குப் போய் வேலை செய்திட்டு வந்தவை.
இப்ப என்னெண்டால், வெளிமாவட்டங்களில 3 வருசம் வேலை செய்திருக்காட்டி அந்த ஆசிரியர்மாருக்கும் வெளி மாவட்டத்துக்கு இடமாற்றம் குடுக்கோணும் எண்டு வடக்கு மாகாணக் கல்விக்குப் பொறுப்பான மேலிடம் ஒற்றைக்காலில நிக்குதாம். அதோட ஏற்கனவே நிபந்தனை அடிப்படையில வெளிமாவட்டங்களில இரண்டு வருசம் வேலை செய்த ஆசிரியர்களையும், இடமாற்ற லிஸ்ட்டுக்குள்ள போட்டிருக்கிறாராம் வடமாகாணப்பெரியவர்.மேலிடத்துக்கு வெளிமாவட்டத்தில் இருந்து எத்தினைபேர் யாழ்ப்பாணத்துக்கு வருகிமோ, அதேயளவான ஆசிரியர்மார் வெளிமாவட்டத்துக்கும் போகோணுமாம். இங்கதான் இருக்குதுசிக்கல்.
வெளிமாவட்டங்களில கூடுதலா ஆரம்பப்பிரிவுக்கு படிப்பிக்கிற ஆசிரியர்மார்தான் இருக்கினம். அதோட கலைப்பட்டதாரியளும் கனக்கப்பேர் ஆசிரியர்களா இருக்கினம். வாற தெண்டா அவைதான் யாழ்ப்பாணத்துக்கு வரோணும். ஆனால் தொழில்நுட்பப் பாடங்கள், விவசாய விஞ்ஞானம். உயிரியல் விஞ்ஞானம். பெளதிக விஞ்ஞானம் எண்டமாதிரி பாடங்களுக்கு யாழ்ப்பாணத்திலேயே கொஞ்சப்பேர்தான் இருக்கினம். அவையில கனபேருக்கு வெளிமாவட்டம் போகச் சொல்லி கடிதம் வந்திருக்காம். ஆனால் அவைக்குப் பதிலா அதேபாடம் படிப்பிக்கிறவை யாழ்ப்பாணத்துக்கு வரேலை. வெளிமாவட்டத்தில அப்பிடியான பாடத்துக்கு ஒண்டிரண்டு பேர்தான் இருக்கினம். அப்ப எப்பிடி வாறது? அதால அங்க இருந்து ஆரம்பப்பிரிவு, மியூசிக், டான்ஸ், கலை எண்டு ரீச்சர்மார் யாழ்ப்பாணம் வர, அந்தப் பாடங்களோட சம்பந்தமேயில்லாத தொழில்நுட்பம், விவசாய விஞ்ஞானம், உயிரியல், பௌதிகம் இரசாயனம் மாதிரியான பாடங்களைப் படிப்பிக்கிறவை வெளிமாவட்டங்களுக்குப் போகப்போயினம். இதைத்தான் பண்டமாற்று இடமாற்றம் எண்டுறது. கண்ணைமூடிக் கொண்டு கணக்கு காட்டுறதுக்காக இடமாற்றம் செய்தால் இப்பிடித்தான் வரும்.
இதைவிட இடமாற்றம் வந்த ஆசிரியர்களின்ர மேல் முறையீடுகளை வாசிச்சுக்கூட பாக்காமல், அவையை இப்ப இருக்கிற பள்ளிக்கூடங்களில 'சைன் பண்ண அனுமதிக்க வேண்டாமெண்டு அதிபர்மாருக்கு, ஏதோ பெரிய இங்கிலாந்து 'குயின்' எண்ட நினைப்பில வாய்மொழி உத்தரவும் குடுக்கிறாராம் மேலிடத்துப் பெரியவர்.
இப்ப சிக்கல் என்னெண்டால், இப்பிடியான முக்கியமான ரீச்சர்மார் அரிதான- பாடங்களை எடுத்த பிள்ளையள், இந்தப் பண்டமாற்று இடமாற்றத்தால படிப்பிக்க வாத்திமார் இல்லாமல் எக்ஸாமில குறைவாத்தான் மார்க்ஸ் எடுக்கப் போகுதுகள். இன்னொரு பக்கம் வெளிமாவட்டத்தில படிப்பிக்க பிள்ளையள் இல்லாமல் ஆசிரியர்மார் மேலதிகமா இருக்கப் போயினம்,பிறகு 'எங்கட கல்வி விழுந்திட்டுது 'எண்டு ஒப்பாரி வைச்சு ஒரு பிரியோசனமுமில்லை.
(26.02.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.