(பட்சி)
ஆக்களை எப்பிடியெல்லாம் டிசைன் டிசைனா ஏமாத்திக் காசு உழைக்கலாம் எண்டதைப் பற்றி 'சதுரங்க வேட்டை எண்டொரு படம் வந்ததைப் பார்த்திருப்பியள் . ஆனால் சதுரங்கத்தை வைச்சே காசு பாக்கலாம் எண்டதை எங்கடை ஆக்களிட்டத்தான் அந்தப் படம் எடுத்தவை படிக்கோணும். நேற்று எங்கட பேப்பரில சதுரங்கப் போட்டியில நடந்த குளறுபடி பற்றி ஒரு செய்தி வந்ததெல்லோ. அதை வாசிச்சுப் போட்டு கனபேர் போனிலை நிறைய முறைப்பாடு. அதுகளை விசாரிச்சுக் கொண்டே போனால், இப்பிடியெல்லாம் காசு உழைக்கலாமா எண்டு தலையே சுத்தத் தொடங்கிட்டுது.
வடமராட்சியில ஏற்கனவே ஒரு சதுரங்கக்கழகம் இயங்கிக் கொண்டிருக்கேக்க. சதுரங்கத்துக்கு ஒரு அக்கடமி வைக்கவெண்டு சொல்லி வந்தவாதான் இந்த அம்மணியாம். வந்தவா தனிய ஒண்டும் செய்யேலாது எண்டு விளங்கினதால, நெல்லியடியில இருக்கிற சதுரங்கக்கழகத்தோட சேர்ந்து போட்டியள் வைக்கிறன் எண்டு வெளிக்கிட்டிருக்கிறா. இதுக்கு முதலும் ஒரு போட்டி வைச்சிருக்கிறா. நிறையப்பேர் அந்தப் போட்டிக்கு வந்திருக்கினம். ஆனால் ஏற்பாடுகள் ஒண்டும் ஒழுங்கில்லை. போட்டியை நடத்த சிங்கள ஆக்களைக் கொண்டந்தும் எல்லாம் படுசொதப்பல். போதாக்குறைக்கு இந்தப் போட்டியை நடத்தின அம்மணி ஹிட்லர் மாதிரி நடந்திருக்கிறா. போட்டிக்கு வந்த ஒரு பொம்பிளைப் பிள்ளை யூரின் போறதுக்கு பெர்மிசன் கேட்டிருக்குது. ஆனால் ஒண்டுக்கும் விடேலாது எண்டு அம்மணி சொல்லி, அந்தப்பிள்ளையை வெளியில போகவிடாமல் செய்திருக்கிறா. எவ்வளவு நேரம் தான் அந்தச் சின்னப் பிள்ளையால அடக்க ஏலும்? அது உள்ளுக்கையே யூரின் இருந்திட்டது. அதுக்குப் பிறகு இந்த விசயம் பெரிசாகி. அம்மணிக்கு ஆக்கள் அடிக்காத குறையா பேசி. 'இப்பிடி பிள்ளையளை வதைக்கக் கூடாது' எண்டு சொன்னவை. அந்தப் போட்டியாலயே அவாக்கு லட்சக்கணக்கில காசு சேர்ந்ததாம். ஆனாலும் மெடல், சேர்ட்டிபிக்கெட், பரிசு எண்டு அவாக்கு இருபத்தையாயிரத்துக்குள்ளதான் செலவு.கொழும்பில இருந்து கூட்டியந்த ஆக்களுக்கு குடுத்த சம்பளத்தையும் கழிச்சால் எப்பிடியும் அந்த ஒரு போட்டியில மட்டும் ஒரு லட்சமாவது அவாவின்ர கையில மிஞ்சியிருக்குமாம்.
அந்த ருசியிலதான் பிறகு அதே கழகத்தின்ர லேபிளுக்க ஒளிச்சு நிண்டுகொண்டு இன்னொரு போட்டியை வைக்க வெளிக்கிட்டவா. 5 வயது. 7 வயது, 11வயது. 15 வயது எண்டு பிள்ளையளிண்ட வயசுப்படி ஐஞ்சு பிரிவா போட்டி நடக்குமெண்டுதான் அறிவிச்சவை, நோர்மல் போட்டி, 3 நிமிசத்தில நடக்கிற மின்னல் வேகப் போட்டி எண்டு ரண்டுவிதமான போட்டியில் ஒருபிள்ளை விளையாடலாம். ஆனால் ரண்டுக்கும் தனித்தனியா ஆயிரம் ரூபா கட்டோணும். ரண்டும் சேர்த்து விளையாடுற தெண்டால் ஆயிரத்து ஐநூறு ரூபா கட்டோணூமாம். 200 பிள்ளையளுக்கு கிட்ட காசு கட்டினவை. அப்பிடிப்பாத்தால் 3 லட்சத்துக்கும் மேல அம்மணியின்ர கையில போயிருக்கும். இப்பிடிக் காசு வந்தவுடன, சடாரெண்டு கதையை மாத்தி, II வயதுக்கு கீழ்ப்பட்டவை .ll வயதுக்கு மேற்பட்டவை எண்டு ரண்டு குரூப்பா மட்டும் தான் போட்டி யெண்டு சொல்லியிருக்கினம். கனபேருக்கு இந்தத் தகவல் போகவே இல்லை, அதைவிட போட்டிக்கு கட்டின காசு வந்திட்டா, விண்ணப்பப்படிவம் கிடைச்சிட்டுதா. போட்டி எங்க நடக்கும் எண்டெல்லாம் போட்டியை நடத்தினவை காசு கட்டிப் பதிஞ்ச பிள்ளையளுக்கு ஒழுங்காச் சொல்லவேயில்லை. கனபேர் தூர இடங்களில இருந்தெல்லாம் வந்தவையாம். II வயதுப் பிள்ளை 21 வயதுக்காரரோடையும் விளையாட வேணும் எண்டா நாங்கள் வந்தே இருக்கமாட்டம், காசும் நட்டம், நேரமும் நட்டம் எண்டு தூர இடத்தில இருந்து வந்தவை புலம்பினவையாம்.
எப்பிடியெல்லாம் எங்கட சனங்கள் உழைக்குதுகள் எண்டு பார்த்தியளோ.
(28.02.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.