(பட்சி)
உயிரோட இருக்கேக்கதான் சாந்தனை "அந்தா விடுறம், இந்தா விடுறம்" எண்டு சிப்பிலியாட்டி, கடைசியா ஆளையே சாக்கொண்டு போட்டாங்கள் எண்டு பார்த்தால், செத்தபிறகும் அவரின்ர 'பொடியை' கொண்டு வந்து சேர்க்கிறதிலையும் பெரும்பாடாப் போட்டுதாம்.முதல்ல அவரின்ர 'பொடியை ஊருக்கு கொண்டு வாறதா? இல்லையா? எண்டதிலயே குழப்பம். ஏனெண்டால் தன்ர மகன் 33 வருசத்துக்குப் பிறகாவது ஜெயிலால உயிரோட வருவான் எண்டு காத்துக் கொண்டிருந்த அவரின்ர அம்மாவுக்கு "சாந்தன் செத்திட்டார்" எண்டு உடன சொன்னால் வருத்தம் கூடிடுமோ எண்டு குடும்பத்தாருக்கு பயம். அதால முதல்ல அவாவுக்கு இதைப்பற்றி சொல்லேல. பிறகு மெல்ல மெல்லத்தான் சொன்னவை.33 வருசமா அந்தத் தாய் கண்ட கனவு இப்பிடி சுக்குநூறானால் எப்பிடியிருக்கும்?
"என்ர பிள்ளையின்ர 'பொடியை' எனக்குக் காட்ட வேண்டாம். என்ர பிள்ளை சிறையிலேயே இருக்கெண்டு நினைச்சிட்டு இருக்கிறன்" எண்டு சொல்லி அழுதிருக்கிறா. அதால அவரின்ர 'பொடியை' கொண்டு வர வேண்டாம் எண்டு வீட்டுக்காரர் முதலில நினைச்சிருக்கினம். ஆனால் "சாந்தன் இப்ப உங்கட மகன் மட்டுமில்லை. தேசத்தின்ர பொதுச்சொத்து, அவரைத் தான் நாட்டுக்கு கொண்டு வர முடியேலை.அவரின்ர உடம்பையாவது கொண்டந்து அஞ்சலி செய்யிறது தான் அவருக்கு நாங்கள் குடுக்கிற மரியாதை" எண்டு கம்பஸ்காரரும். புலம்பெயர் ஆக்களும், இந்தியாவில இருக்கிறவையும் கெஞ்சிக்கேட்டதாலதான் அவரின்ர உடம்பை வீட்டை கொண்டுவர வீட்டுக்காரர் சம்மதிச்சவை.
அதிலையும் அவரின்ர 'பொடி கட்டுநாயக்கவில வந்திறங்கின உடனேயே, அதைக் கம்பஸ்காரர் பொறுப்பேற்கிறது எண்டும். அப்பிடியே கொண்டந்து ஒரு பொது இடத்தில வைச்சு மக்கள் அஞ்சலி செய்யிற தெண்டும் தான் முதல் ஏற்பாடு. ஆனால் ஏதோ ஒரு தரப்பு. கம்பஸ்காரர் கட்டுநாயக்க எயார்போர்ட் போறதை நிப்பாட்டிப் போட்டுது. அநேகமா கம்பஸ்காரர் பின்னேரத்தில 'சமோசா' சாப்பிடப் போற இடத்துக் காரர் தான் இப்பிடியொரு வேலையச் செய்திருக்கோணும். கம்பஸ்காரர் போகாததால வீட்டுக்காரரே 'பொடியை' கொண்டுவர வேண்டியதாப் போட்டுது. சாந்தன்ர சடலத்தை. அவருக்காக வாதாடின லோயர் புகழேந்திதான் பொறுப்பெடுத்து இந்தியாவில இருந்து கொண்டந்தவர். எயார்போட்டுக்கு விடியவே 'பொடியை' கொண்டந்தாலும், அதை எடுக்கிறதில ஒரு பெரும் சிக்கல். எந்தச் சாந்தன்ர 'பொடி' கொண்டுவரப்பட்டுதோ, அதே'சாந்தன்' தான் அதைப் பொறுப்பெடுப்பார் எண்டு சடலத்தை அனுப்பி வைச்ச 'கார்கோ'கொம்பனிக்காரர் பதிஞ்சிருக்கினம். அதால லோயர் புகழேந்தியால அவரின்ர சடலத்தை உடனை எடுக்கேலாமல் போட்டுது. சாந்தன் உயிரோட வந்தால் தான் பொடியை எடுக்கலாம் எண்ட நிலைமை,பிறகு தமிழகத்தில இருக்கிறகொம்பனிக்கு அறிவிச்சு, அவை தாங்கள் விட்ட பிழையைத் திருத்தி. புதுசா பதிஞ்சு, அதின்ர ரிசீற் கட்டுநாயக்கவுக்கு வந்த பிறகுதான் 'பொடியை எடுக்க முடிஞ்சுதாம்.
அதுக்குப் பிறகும் விடேலை, போஸ்ட் மட்டம்,மரணவிசாரணை எண்டு இழுத்தடிச்சுக் கொண்டே இருக்கினம். வாழேக்கதான் சாந்தனை சிறைக்குள்ள வைச்சு சித்திரவதை செய்தியள். சவப்பெட்டிக்குள்ளயாவது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடமாட்டியளோ?
(02.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.