(பட்சி)
யாழ்ப்பாணத்தில நாலைஞ்சு நாளா எங்கட சனங்கள் பிளேன் பார்க்க கூட்டம் கூட்டமாப் போனதுகள். ஹரிகரன்ர நிகழ்ச்சிக்கு எப்பிடி அள்ளுண்டு போச்சுதுகளோ அதைமாதிரி ஆமிக்காரர் வைச்ச இந்த பிளேன் கண்காட்சிக்கும் சனம் அள்ளுப்பட்டுக்கொண்டு தான் போனதுகள்.உந்த அனலடிக்கிற வெயிலுக்குள்ளையும் அங்க போய், பிளேன் எல்லாம் பார்த்து, செல்பியளும் எடுத்து ஒரே கொண்டாட்டம் தான். ஆனால் உங்க போன சனங்களை வெடுக்குநாறிமலையில நடந்த அக்கிரமத்துக்கு நீதி கேட்டு இண்டைக்கு நடக்கிற போராட்டத்துக்கு வரச்சொன்னால் . ஒருத்தரும் எட்டியும் பாக்காயினம். எங்கட சனத்தின்ர மனநிலை மாறிக் கொண்டே வருகுது. அதுக்கேத்தபடி எங்கட உரிமைக்கான போராட்டங்களையும், அதின்ர வடிவங்களையும், போக்குகளையும் மாத்தாட்டி எதிர்காலத்தில எல்லாம் கஷ்டமாப் போடும்.
இப்ப பட்சி சொல்லவந்த விசயம் அதில்லை. வேற ஒண்டிருக்கு. உந்தப் பிளேன் கண்காட்சி நடந்த முத்தவெளிக்கு முன்னால உள்ள முச்சந்தியில ஒரு வள்ளுவர் சிலை இருக்கெல்லோ. தமிழில மட்டுமில்லாமல் உலகத்தில பெரும்பாலும் எல்லா மொழியளிலையும் இண்டைக்கும் வாசிக்கப்படுற திருக்குறளை எழுதின தமிழ்ப் புலவர் வள்ளுவர் எண்டது எல்லாருக்கும் தெரியும். அப்பிடி உலகத்தில உள்ள எல்லாரையுமே மலைக்க வைச்ச ஒரு இலக்கியத்தை தமிழில எழுதினதுக்காக, அவருக்கு மரியாதை செய்யிறதுக்காக. அவரைப் பற்றி எங்கட அடுத்த தலைமுறையும் தெரிஞ்சு கொள்ளோணும் எண்டதுக்காக யாழ்ப்பாணத்தில வள்ளுவருக்கு உந்த முச்சந்தியில சிலை வைச்சவை. இப்ப கண்காட்சி வைச்ச இலங்கை விமானப்படைக்காரர் தங்கட 73ஆவது ஆண்டுக் கொண்டாட்ட சின்னத்தை அந்த வள்ளுவர் சிலையை மறைச்சுக் கட்டித்தான் கண்காட்சி வைச்சவை. இப்பிடி வள்ளுவர் சிலையை மறைச்சு, விமானப்படையின்ர சின்னத்தை வைக்க மாநகரசபை எப்பிடி அனுமதி குடுத்தது? எண்டு அதைப் பார்த்த எல்லாரும் கேக்கினம். ஒருவேளை மாநகரசபைக்குத் தெரியாமல் தான், விமானப்படைக் காரர் இப்பிடி அதை மறைச்சவை எண்டால் நாலைஞ்சு நாளா ஒண்டுமே செய்யாமல் ஏன் கையைக் கட்டிக் கொண்டு இருந்தவை? இப்பிடி வள்ளுவர் சிலையை வேற ஆரும் மறைச்சு ஏதும் சின்னத்தையோ, பனரையோ கட்டியிருந்தால் மாநகரசபைக்காரர். : பாய்ஞ்சடிச்சுக் கொண்டு வந்திருப்பினம். எல்லா பனரையும், கட்-அவுட்டுகளையும் உடைச்செறிஞ்சு போட்டுத்தான் அடுத்தவேலை பார்த்திருப்பினம். கொஞ்சநாளைக்கு முதல் பரமேஸ்வரா றோட்டுக்கரை யில தாங்களுண்டு, தங்கட யாவாரம் உண்டு எண்டு இருந்த நடமாடும் அப்பக்கடையையும். காளான் கடையையும் போக்குவரத்துக்கு இடையூறு எண்டு நல்லூர்ப் பிரதேசசபைக்காரர் அதுகளை அகற்றினவை. இப்பிடி எங்கட சனங்கள் ஏதோ தங்கட வருமானத்துக்காக ஓரமா ஏதும் செய்தாக் கூட உள்ளூராட்சிக்காரருக்கு கண்ணுக்ககுத்தும். ஆனால் ஆமியோ, நேவியோ. பொலிஸோ, விமானப்படையோ நடுறோட்டில வந்து இப்பிடி எல்லாரும் மதிக்கிற வள்ளுவரின் சிலையைக் கேட்டுக் கேள்வியில்லாமல் மறைச்சு. கட்-அவுட் கட்டினால் கண்ணைப் பொத்திகொண்டு இருப்பினம்.
இதைமாதிரி கொழும்பில ஆரும் சிங்களக் கவிஞர்மார், அரசர்மாரின்ர சிலை இருந்தால் அதுகளை மறைச்சுக் கட்டிப்போட்டு விமானப்படை இப்பிடி தங்கட கட்-அவுட்டை வைக்க ஏலுமோ? பிக்குமாரெல்லாம் பிரண்டடிச்சு வந்து பிடுங்கியெறிஞ்சிருப்பினமெல்லோ. நாங்கள் இளிச்சவாயள் எண்டதால், என்னவும் செய்வினம். எல்லாத்தையும் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கோணும். எல்லாம் எங்கட தலைவிதி.
(11.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.