"உடையவன் இல்லாட்டி ஒருமுழம் கட்டை' என்னதான் ஒப்புக்குச் சப்பாணியா ஆலையில்லா ஊரில இலுப்பம்பூவை சக்கரைக்குப் பதிலாப் பாவிச்சாலும் சக்கரை இருக்கிற மாதிரி வராது தானே. அப்பிடித்தான் இப்ப யாழ்ப்பாணம், கிளிநொச்சி எண்டு ரண்டு மாவட்ட நிர்வாகங்களும், மாவட்டச் செயலாளர்மார் இல்லாமலே முக்கித் தக்கி ஓடிக்கொண்டிருக்குது. இதுக்கு முதல் இந்த ரண்டு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளராக இருந்தவை பெஞ்சன்ல போய், ஒருகிழமை தாண்டியும் இன்னும் அவையின்ர இடத்துக்கு புதிசா ஒருத்தரையும் போடேலை. தற்காலிகமா அவையின்ர வேலையளைச் செய்யிறதுக்கு ஒவ்வொருத்தரைப் போட்டிருந்தாலும், அவைக்கும் கன விசயங்களைச் செய்யிறதுக்கு உரிய அதிகாரம் இல்லை. வழக்கமா இப்பிடி மாவட்டச்செயலர்மார் பெஞ்சனில போகப் போயினம் எண்டால், அதுக்கு முதலே அவையின்ற இடத்துக்கு ஆளை செலக்ட் பண்ணிப்போடுவினம். பழையவர் பெஞ்சனில போன அதேநாளில புது ஆள் அந்தக் கதிரையில வந்து இருப்பார். சிலவேளை ஒண்டிரண்டு நாள் பிந்தலாம். ஆனால் இப்பிடிக் கிழமைக் கணக்கா மாவட்டச்செயலர் இல்லாமல் யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இருக்கேலை.
இந்தமுறை இப்பிடிக் கிழமைக்கணக்கா இந்த ரண்டு மாவட்டச் செயலாளர் பதவிக்கும் புது ஆக்கள் இன்னமும் போடுப்படாததுக்குப் பின்னால கனக்க காரணங்கள் இருக்கு. முக்கியமான காரணம், இந்த ரண்டு மாவட்டச் செயலர்மாரும் பெஞ்சனிலபோக விருப்பப்படேலை. அமைச்சரைப் பிடிச்சால் எப்பிடியாவது இன்னும் ஒண்டிரண்டு வருசமாவது பதவியை விட்டு இறங்காமல் இருக்கலாமெண்டு நம்பிட்டினம். அதெல்லாம் நான் அமைச்சரவைப் பத்திரம் போட்டு எல்லாத்தையும் வெண்டு தருவன் எண்டு அமைச்சரும் ஆசைகாட்டினதால், ரண்டு வருசத்துக்கு இந்த மாவட்டங்களுக்கு செயலாளரா புதுசா ஆரையும் போடவேண்டி வராது எண்டு மேல் மட்டங்களும் பேசாமல் இருந்திட்டினம். ஆனால் அமைச்சரோ, இந்த மாவட்டச்செயலர்மாரோ எதிர் பார்க்காத வகையில இவையின்ர காலநீடிப்புக்கு அமைச்சரவை மாட்டனெண்டு மறுத்தான் அடிச்சுப் போட்டுது. அதாலதான் புது ஆளை எடுத்துப் போட அவகாசமில்லாமல் போட்டுதாம்.
இப்ப அவை ரண்டு பேருக்கும் காலநீடிப்பு இல்லையெண்டதால, புது ஆக்களைப்போட அலுவல்கள் அறம்புறமா நடக்குதாம். தங்களை மாவட்டச் செயலராப் போடச் சொல்லி, மேல்நிலையில இருக்கிற அதிகாரிமார் ரணிலின்ர நெருங்கினவை மூலம் தூது அனுப்புகினமாம். ஆனால் இப்ப மூப்பு நிலையில மேல்மட்டத்தில உள்ள அதிகாரிமாரெல்லாம் இன்னும் ஒருவருசத்துக்குள்ள பெஞ்சனில் போகவேண்டிய ஆக்களாம். அவையைப் புதிசா மாவட்டச் செயலாளராப் போட்டால், நாலைஞ்சு மாதத்துக்குள்ள அவையும் பெஞ்சனில போடுவினம். பிறகு அவைக்குப் பதிலா வேற ஆக்களைத் தேடோணும். அதால நாலைஞ்சு வருசமா பெஞ்சனில போகாமல் இருக்கக்கூடிய அதிகாரிமாரைத்தான் போடப்போயினம் எண்டு கதை. சிலவேளை தென்னிலங்கைப் பக்கம் வேலை செய்துகொண்டிருக்கிறவையும் இஞ்ச வரலாம் எண்டு ஒரு தகவல். எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாப்பம்.
(15.03.2024 - உதயன் பத்திரிகை)
i044wp
hlsla8
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.