''காட்டிக் கொடுப்பவன் எங்கே ? அந்த கயவனைக் கொண்டு வா இங்கே " எண்டு இயக்கப்பாட்டொண்டு முந்தி வலுபேமஸ். எப்பவும் எங்கட இனத்தில காட்டிக் குடுக்கிறதுக்கெண்டே ஒரு கூட்டம் அலையுது. பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டியளில எங்கட இனத்தின்ர போராட்ட அடையாளங்களையும், அரசாங்கத்தின்ர இப்பத்தை ஆக்கிரமிப்புகளையும் சொல்லுறமாதிரி, இல்லங்களை டெக்கிறேசன் செய்து கொண்டு வந்தவை. ஆனால் அதை ஆரோ திணைக்கள அதிகாரிமாருக்கு போட்டுக்குடுக்க, அவை அதுகளை நிப்பாட்டச் சொல்லி சூம்' மீட்டிங்கில ஓர்டரும் போடுப்பட்டது. அதோட இப்பிடி டெக்கிறேசன் செய்யிறது கொஞ்சம் குறைஞ்சிருந்தது.
இப்பிடியான நிலையிலதான் யாழ்ப்பாணம் யூனியன் கொலிச்சில, கார்த்திகைப் பூ, டாங்கி எண்டு இல்லங்களை டெக்கிறேசன் பண்ணினவை. பள்ளிக்கூடத்தில இருக்கிறவைக்கே இப்பிடி டெக்கிறேசன் பண்ணியிருக்கிற தகவல் தெரிய முதல், ஆரோ உதைப்பற்றி பொலிஸுக்கு போட்டுக் குடுத்திட்டினம். அதுக்குப் பிறகு பள்ளிக்கூடப் பிள்ளையளையும், அதிபரையும், ரீச்சர்மாரையும் கூப்பிட்டு பொலிஸ்காரர் கடும் விசாரணையாம். வெளிநாட்டுக்காரர் காசு குடுத்துத்தான் இப்பிடி டெக்கிறேசன் பண்ணினவ எண்டதுதான் பொலி ஸுக்குச் சந்தேகம். அப்பிடிக் காசைக் குடுத்து விளையாட்டுப் போட்டி இல்லங்களை டெக்கிறேசன் பண்ணவேணுமெண்டு வெளிநாட்டுக்காரருக்கு என்ன வில்லங்கம்? விளையாட்டுப் போட்டியளில் இப்பிடி கார்த்திகைப் பூவை டெக்கிறேசன் செய்தால். தமிழீழம் தானா வந்திடுமாமோ? இல்லாட்டி டாங்கி மாதிரி அலங்காரம் செய்தால், அந்த டாங்கிக்கு உயிர்வந்து இஞ்சையுள்ள ஆமிக்காரரை குண்டடிச்சுக் கொண்டிடுமோ? இல்லைத்தானே. பிறகென்ன கூந்தலுக்கு பள்ளிக்கூடப் பிள்ளையளின்ர டெக்கிறேசனுகளை இப்பிடிப் போட்டுக்குடுக்கினமெண்டு அம்மாவாணை விளங்கவேயில்லை.
பள்ளிக்கூட நிர்வாகத்தோட தனிப்பட்ட கோபம் உள்ளவைதான் இப்பிடிப் போட்டுக்குடுத்திருக்கினம் எண்டு பரவலாக் கதை அடிபடுகுது. ஆனால் அப்பிடித் தனிப்பட்ட கோபதாபத்துக்காக இப்பிடிப் பள்ளிக்கூடப் பிள்ளையளின்ர வாழ்க்கையில விளையாடுறதை ஒருத்தரும் ஏற்றுக்கொள்ளாயினம். போட்டுக்குடுக்கிறவைக்குத்தான் மதி மத்திமம் எண்டு பாத்தால், அதை ஒரு முறைப்பாடா நினைச்சு. விசாரிக்கிறவை எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் எண்டு பாருங்கோ.
சிங்களப் பள்ளிக்கூடங்களில இதைவிடப் பென்னம் பெரிசாவெல்லாம் டாங்கி செய்யினம். இப்ப கிட்டடியில யாழ்ப்பாணத்தில விமானப்படைக்காரர், தங்கட பிளேன் எல்லாம் கொண்டந்து இஞ்சத்தைப் பள்ளிக்கூடப் பிள்ளையளுக்குக் காட்டினவை, சும்மா ஒரு கடுதாசி மட்டையிலயும் பேப்பரிலையும் செய்த டாங்கியாலையும், கார்த்திகைப்பூவாலையும் நாட்டின்ர அமைதி கெடு மெண்டால், சிங்களப் பள்ளிக்கூடப் பெடியள் செய்த டாங்கியாலையோ. இல்லாட்டி போரை நினவு படுத்துற விமானங்களையோ இஞ்ச கொண்டந்தது கடும்பிழை எல்லோ. சிங்கள ஆக்கள் எது செய்தாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத பொலிஸ், தமிழர்கள் எண்டவுன துள்ளிக்குதிச்சுக் கொண்டு விசாரணையில இறங்குறதுதான் எங்கட டிசைன் போல.....
(02.04.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.