(பட்சி)
சாண் ஏற முழம் சறுக்கினமாதிரித்தான் வீட்டுக்கட்சியின்ர வழக்கு விசயங்கள் போய்க்கொண்டிருக்குது. ஒருபக்கம் வழக்குப் போட்டவையோட கதைச்சு, இணக்கப்பாட்டுக்குப் போற அலுவலும் நடக்குது. ஆனால் வழக்குப் போட்டவை ஒருநிலையில இல்லையாம். ஒவ்வொருக்கா ஒவ்வொரு கதை சொல்லுகினம். முக்கியமா திருகோணமலையில வழக்குப் போட்டவர்தான் இப்பிடி ஒருநேரம் ஒரு கதை எண்டுகினம். எல்லாரும் போய் அவரோட கதைக்கேக்க நல்லபடியாக் கதைப்பாராம். போனவை சொல்லுறதையெல்லாம் கேட்டிட்டு "சரி, வழக்கை வாபஸ் வாங்குறன்" எண்டு தலையாட்டுவாராம். பிறகு 'ஒருக்கா இதைப்பற்றி சொல்லிப்போட்டு வாறன்" எண்டிட்டு போனையும் எடுத்துக்கொண்டு அங்கால போட்டு திரும்பி வருவாராம். வந்தவர் முதல் இருந்ததுக்கு எதிர்மாறா நிண்டுகொண்டு "அதெல்லாம் நீங்க சொல்றபடி வாபஸ் வாங்க ஏலாது. 27ஆம் திகதி தெரிவு செய்த நிர்வாகத்தை அப்பிடியே ஏற்றுக்கொள்ளுறதெண்டு சொன்னாத்தான் வாபஸ் வாங்கலாம். இல்லாட்டி வழக்குத்தான்" எண்டு கொஞ்சம் திமிராக் கதைப்பாராம். பிறகு திரும்ப அவருக்கு முதலில இருந்து எல்லாம் விளங்கப்படுத்த, மெல்ல மெல்ல ஆள் மனம் மாறி "சரி, வாபஸ் வாங்கி றன்" எண்டிட்டு திரும்பவும் போனோடபோவாராம். அவர் போனைத் தொட்டாலே வேதாளம் முருங்கை மரத்தில ஏறிட்டுது எண்டு அர்த்தம். போனவர் திரும்ப வந்து "இல்லை. நிபந்தனையில்லாமல் வாபஸ் வாங்க ஏலாது" எண்டு அடம்பிடிப்பாராம்.
அவரோட சமரசம் கதைக்கப்போன ஆக்களுக்கு "என்னடா இது?" எண்டமாதிரிப் போட்டுதாம். "இந்தாளோட கதைக்கிறதைவிட பேசாமல் வழக்காடுறது சுகம் போல"எண்டு சமரசம் கதைக்கப்போனவை தங்களுக்குள்ள கிசுகிசுத்திருக்கினம், அந்தளவுக்கு கடும் வதை. அப்பிடி வதைச்சும் கடைசிமட்டும் ஒரு முடிவுக்கு வரேலை. இப்ப வீட்டுக்கட்சிக்காரரே ஒரு முடிவுக்கு வந்திட்டினம் போல இருக்கு.
"கோர்ட்ஸில போய் . யாப்பில சொல்லப்பட்டதுக்கு மாறாத்தான் சில விசயங்கள் நடந்திருக்கு. ஆனால் அப்ப நிர்வாகம் எங்கட கையில இருக்கேலை. அதால நாங்கள் அதுக்குப் பொறுப்பேற்கேலாது. எண்டாலும் யாப்புப்படிதான் எல்லாம் நடக்க. வேணும் எண்டதில நாங்களும் உறுதியா இருக்கிறம். யாப்பின்படி எல்லாம் சரியா நடக்கவேணும் எண்டால், மூலக்கிளையில இருந்து எல்லாத்தையும் கலைச்சு, புதிசா ஆக்களைத் தெரிஞ்ச பிறகு தலைவர் தெரிவையும், நிர்வாகத் தெரிவையும் செய்வம்" எண்டு வீட்டுக்கட்சியில புதிசா தெரிவுசெய்யப்பட்டவை சொல்லப்போயினமாம்.
அப்பிடி மூலக்கிளை, தொகுதிக்கிளை, மாவட்டக்கிளை எண்டு எல்லாத்துக்கும் தெரிவை புதிசா, நீதிமன்றத்தின்ர மேற்பார்வையோட நடத்தினால், சுமந்திரன் தரப்புக்குத்தான் சிக்கல் வருமாம். ஏனெண்டால் எப்பிடியோ சிறீதரனுக்குத்தான் கட்சிக்குள்ள சப்போர்ட் கூட இருக்கெண்டு எல்லாருக்கும் தெரிஞ்சு போட்டது. அதால புதிசாத் தெரியிற ஆக்களுக்குள்ள அவரின்ர ஆக்கள் தான் கூடுதலா வரச் சான்ஸ் இருக்குது.
அதைவிட இன்னொரு தகவலும் இருக்கு. இப்பிடி யாப்பின்படி கட்சியைச் சீரமைச்சால், இப்ப மாதிரி எலக்சன் நடக்காமலே சிறீதரன் ஏகமனதாத் தெரிவு செய்யபடுவாரெண்டும் சொல்லுப்படுகுது. அப்பிடி ஏகமனதாத் தெரிவு செய்யிறதுக்கு முன் மொழியிறது ஆர் தெரியுமோ? சுமந்திரன் தானாம். இதெல்லாம் காத்துவாக்கில விழுந்த கதையள். உண்மை, பொய் பட்சியறியாது பராபரமே!
(27.02.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.