(பட்சி)
கிளிநொச்சியில அரசாங்க அதிபரா இருந்தவா போனகிழமையே அறுபது வயது வந்து, பென்சன் எடுத்திட்டா. அவான்ர மணிவிழாவுக்கு ஒரு சிறுவர் இல்லம் காசுமெத்திப்போய் சாப்பாட்டுச் செலவுக்கு ஸ்பொன்ஸர் பண்ணினதையும் பட்சி முதல் சொல்லியிருந்தது. பென்சனிலபோயும் அவா இன்னும் அரசாங்கத்தின்ர வாகனத்தையோ. குவார்ட்டஸையோ குடுக்கேலை. இத்தனைக்கும் அவான்ர சொந்த இடம் கிளிநொச்சிதான். அப்ப அவாக்கு என்னத்துக்கு குவார்ட்டஸ்? அரசாங்க அதிகாரிமார் ஆத்திர அவசரத்துக்கு தங்கட சொந்த விசயத்துக்கு வாகனத்தை ஓடினாலே 'ஓடிட்'காரர் ஓடியந்திடுவினம் . ஆனால் ஒரு அரசாங்க அதிபரா இருந்தவா, பென்சனில போனால் தன்ர வாகனத்தை முறைப்படி ஒப்படைச்சிருக்கவேணும். ஆனால் ஒப்படைக்கேலை. குவார்ட்டஸை விட்டு தன்ர வீட்டை போயிருக்க வேணும். ஆனால் இன்னும் போகேலை. ரூல்ஸ் எல்லாம் நல்லாத் தெரிஞ்சும் அவா போகாமல் இருந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. எல்லாமே வீணைவாசிக்கிற அமைச்சரின்ர 'சப்போர்ட் இருக்கெண்ட தைரியம்தான்.
கிளிநொச்சியில அமைச்சர் என்ன சொல்லுறாரோ அதைத்தான் அம்மணி இவ்வளவுகாலமும் செய்து கொண்டு வந்தவா. அதால மற்ற அரசியல்வாதிமாரை அவா எள்ளளவும் மதிக்கிறதேயில்லை. இந்தமுறை கூட எம்.பி.மாருக்குக் குடுக்கிற பன்முகப்படுத்தப்பட்ட நிதி யொதுக்கீட்டுக்குப் பதிலா. கச்சேரி மூலமாத்தான் நிதி யொதுக்கீடு நடந்தது.வீணைக்கட்சிக்காரரும்,கிளிநொச்சி அரசாங்க அதிபரும் மற்றக் கட்சியளுக்கு இதைப்பற்றி ஒண்டும் சொல்லாமல் தாங்கள் நினைச்சபடி, தங்கட ஆக்களுக்குத்தான் இந்த ஒதுக்கீடுகளைச் செய்தவையாம். ஏற்கனவே தங்கட கட்சியை விட்டிட்டுப் போய், கிளிநொச்சியில ஓரளவுக்கு காலூண்டியிருக்கிற சந்திரமானவரால் வீணையின்ர சத்தம் கிளிநொச்சியில அடங்கிக் கிடந்தது.ஆனாலும் இப்ப அமைச்சர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரா வந்தபிறகு, அரசாங்க அதிபரின்ர துணையோட திரும்பவும் ஓரளவுக்கு வீணைக்கச்சேரியளை வைக்க வெளிக்கிட்டவை. இப்பிடி எல்லாம் கூடிவரேக்க, அவாக்கு அறுபது வயதாகி பென்சனில் போகவேண்டி வந்திட்டுது. அவா போனால் இனி தன்ர பருப்பு கிளிநொச்சித் தண்ணியில பெரிசா வேகாதெண்டு வீணைக்காரருக்கு தெரியும். அதால அவாவுக்கு இன்னும் ஒருவருசம் கூடுதலாப் பதவியில இருக்க ஒரு விசேட அமைச்சரவைப் பத்திரம் கொண்டந்திடலாம் எண்டு நம்பிக்கை குடுத்திருக்கிறார். அதை நம்பித்தான் அவா இன்னும் வாகனத்தையும், குவார்ட்டஸையும் குடுக்காமல் வைச்சிருந்திருக்கிறா.
தனிய கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கு மட்டும் அமைச்சரவைப் பத்திரம் கொண்டந்தால், தன்ர தில்லாலங்கடி வேலை வெளிப்பட்டிடும் எண்டது அமைச் சருக்குத் தெரியும். அதால் கிளிநொச்சிக்கு இறைச்ச நீர் யாழ்ப்பாணத்துக்கும் பொசியிற மாதிரி யாழ்ப்பாண அரசாங்க அதிபருக்கும் சேர்த்து ஒருவருசம் பதவிநீடிப்புச் செய்யச் சொல்லித்தான் அமைச்சரவைப் பத்திரத்தை முந்தநாள் முன்வைச்சவர். தன்ர சொல்லை அமைச்சரவை தட்டாது எண்டது அமைச்சரின்ர எண்ணம். ஆனால் ரணிலின்ர எலக்சன் கணக்கில இப்பிடி பதவி நீடிப்புக் குடுத்தால் எல்லாம் பிசகிடும். அதால ஒருத்தருக் கும் பதவி நீடிப்பு இல்லையெண்டு அமைச்சரவையைக் கொண்டு முகத்தில அடிச்சமாதிரி சொல்லவைச்சிட்டார் ரணில். இதை வீணைக்கார அமைச்சரும் எதிர்பார்க் கேலை,கிளிநொச்சி அம்மணியும் எதிர்பாக்கேலையாம். இப்ப வாகனம் ஏன் குடுக்கேலை, குவார்ட்டஸை ஏன் விடேலை எண்டதுக்கு என்ன விளக்கம் குடுக்கலாம் எண்டு அவா யோசிச்சுக் கொண்டு இருக்கிறாவாம்.
(21.02.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.